சவுதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ம.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாஹ் தனது பயணத்தின் ஒரு அங்கமாக ஜுபைலுக்கு வருகை புரிந்தார். ஜுபைல் மாநகர் கிளை த.மு.மு.க நிர்வாகிகளுடன் 11.07.12 அன்று மாலை கலந்துரையாடினார். பின்னர், ரீகல் உணவத்தின் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றினார்.
குறுகிய கால அவகாசத்தில், ஜுபைல் த.மு.மு.கவினர் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், "சமூக சேவையின் அவசியம்" எனும் தலைப்பில் பேராசிரியர் உரையாற்றினார்.
தனது உரையில், அறிஞர். செய்யது குதுப் இன் திருமறை விளக்கத்தை மேற்கோள் காட்டி, அமலுன் ஸாலிஹன் எனப்படும் நல்லமல்கள் எவையெவை என்பனவற்றை மிக அழகாக விவரித்தார். இறை விசுவசியானவர், அத்தகைய நல்லமல்களைச் செய்வதன் மூலம் எவ்வாறு வெற்றி பெற்றவர்களாக ஆக முடியும் என விவரித்ததோடு, அத்தகைய நல்லமல்களை கடந்த 17 வருடங்களாக த.மு.மு.க செய்து வருவதையும், அதன் மூலம், சமூக நல்லிணக்கம் தமிழகத்தில் வளர்ந்து வருவதையும் விரிவாக எடுத்துரைத்தார்.
அத்துடன், த.மு.மு.க வின் அரசியல் பிரிவான ம.ம.க மூலம் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடமையாற்றி வருவதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.
சுமார் ஒரு மணி நேர சிறப்புரைக்குப்பின் அவையோரின் கேள்விகளுக்கு அழகாக பதிலளித்தார். குறிப்பாக, கல்வியின் தரம், வட்டியின் கொடுமையிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுப்பது, இட ஒதுக்கீடு மற்றும் அதனை கண்காணிப்பது உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, விரிவாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார்.
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அனேகமானோர், இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த வருகையின் போது ஜுபைல் ராயல் கமிஷன் அரங்கினில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment